districts

தடை செய்யப்பட்ட பாதை: அய்யம்பேட்டை மக்கள் மறியல்

அய்யம்பேட்டை, மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புரக்குடி பாலம் எண்.153 மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையும், சூலமங்கலம் பாலம் எண்.154, ஊராட்சிக்கு உட்பட்ட பாதையும் தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே சர்வீஸ் ரோடு அமைத்துத் தரக் கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  பாபநாசம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை பேருந்து நிழற்குடை அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கனகராஜ், வையச் சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். சர்வீஸ் ரோடு அமைத்துத் தர ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் டிஎஸ்பி பூரணி, அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.