districts

img

வழிகாட்டி பலகையில் 20 நாடுகளின் திசை, தூரம் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் புதிய விழிப்புணர்வு

தஞ்சாவூர், பிப்.20 - தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள உறந்தைராயன்குடிக்காட்டை சேர்ந்தவர் மாமல்லன்(53). இவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்க், டீக்கடை நடத்தி வருகிறார்.  முன்னதாக, இவர் வெளிநாடுகளில் 27 ஆண்டுகளாக பல்வேறு தனியார் கெமிக்கல் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, சொந்த ஊரில் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தஞ்சாவூருக்கே வந்துவிட்டார். தான் வைத்துள்ள பெட்ரோல் பங்க் முன்பு சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் வைத்துள்ளார். கிராம மக்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.  அப்போது வெளிநாட்டுக்கு செல்வது எப்படி என்பது குறித்த வழிகாட்டி பலகை வைக்க எண்ணினார். உலகில் உள்ள முக்கிய நாடுகள் எந்தெந்த பகுதிகளில் இருக்கின்றன,  இங்கிருந்து எத்தனை கிலோமீட்டர், எத்தனை மைல் தொலைவில் அந்த நாடு உள்ளது போன்ற விவரங்களை பெட்ரோல் பங்கு முன்பு வழிகாட்டி பலகையாக வைத்துள்ளார்.  அதாவது ஜி.பி.எஸ் கருவி மூலம் நாட்டின் திசை பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான், தாய்லாந்து, சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் உடைய பெயருடன் கூடிய பலகையை வைத்துள்ளார்.  இதுகுறித்து மாமல்லன் கூறுகையில், “தங்கள் பகுதியில் உள்ளவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். வேலை பார்ப்பவர்களுக்கு அந்த நாடு எங்கு உள்ளது என்பதே தெரியாது.

கிழக்கே உள்ள நாட்டிற்கு வேறுதிசை காட்டுவார்கள். தங்கள் மகன், தங்களது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள், துபாயில் வேலை பார்க்கிறார்கள் என கூறும் இவர்கள் அந்த திசையை மாற்றி கூறுவார்கள். அவர்கள் இந்த வழிகாட்டி பலகையை பார்த்ததால் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பலருக்கும் எந்த நாடு எந்த திசையில் உள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியாமலேயே உள்ளனர்.  அவர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வைத்துள்ளேன். இதற்காக எனது தம்பி மாமன்னன் மிகவும் உறுதுணையாக இருந்தார். தற்போது அவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இன்னும் சில நாட்களில் பல்வேறு நாடுகளின் நாள், நேரங்களை குறிப்பிடும் டிஜிட்டல் கடிகாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.