தஞ்சாவூர், மார்ச் 23- தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலை, குழந்தை இயேசு கோவில் அருகே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடத்தில், மாநகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக கட்டுமானப் பணிகள் செய்வதை உடன் நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் புதன்கிழமையன்று குழந்தை இயேசு கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகர தலைவர் ஹெச்.அப்துல் நசீர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சிமியோன் சேவியர் ராஜ், மறை மாவட்ட வேந்தர் ஏ.ஜான் சக்கரியாஸ், நிர்வாகிகள் ஜேம்ஸ் மற்றும் பலர் பங்கேற்றனர். தஞ்சாவூர் நிர்மலா நகர் டயோசீஸ் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில், வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சட்டத்தை மீறி, மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதற்காக இடத்தை சீர் செய்வதையும், உடனடியாக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்ற வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.