தஞ்சாவூர் அருகே குழந்தையை நரபலி கொடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நசுருதீன் வயது (32), இவரது மனைவி சாலிகா வயது (30) இவர்களுக்கு 5 வயதில் ராஜ்முகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், குழந்தை ஹாஜரா தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறி, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் வியாழக்கிழமை சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் மல்லிப்பட்டினம் சென்று விசாரணையை தொடங்கினர்.
இதில் முதல்கட்ட விசாரணையில் குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், குழந்தையின் தகப்பனார் நசுருதீனின் சித்தப்பாவான அசாருதீன்(52) என்பவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம்(48) என்பவரை குழந்தையின் சிறிய தாத்தாவான அசாருதீன், அவரது மனைவி சர்மிளா (47) உடன் சென்று சந்தித்துள்ளார்.
அதில் உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உயிர்பலி கொடுத்தால் சரியாகிவிடும் என்று கேரள மந்திரவாதி முகமது சலீம் தெரிவித்துள்ளார். இதை நம்பி கடந்த சில தினங்களுக்கு முன் 27 சேவல்களை பலி கொடுத்துள்ளனர். ஆனாலும், பிரச்சினை தீரவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மறுபடியும் கேரள மந்திரவாதியை சந்தித்துள்ளனர். அவர் நரபலி கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு குழந்தை தனது தந்தை நசுருதீன், தாய் சாலிகா ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அசாருதீன் மனைவி சர்மிளா என்பவர் குழந்தையை தூக்கிச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையை கொன்றால் தான் பிரச்சினை தீரும் என சர்மிளா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னர் குழந்தையை கொலை செய்ததாக சர்மிளா பேகம், உடந்தையாக இருந்த அவரது கணவர் அசாருதீன், கேரள மந்திரவாதி முகமது சலீம் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ்வரன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், குற்றப்பிரிவு டிஎஸ்பி இராஜ்குமார், குழந்தைகள் நல அலுவலர், முன்னிலையில், 2 அரசு பெண் டாக்டர்கள் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சடலத்தை புதைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்திரவாதியின் தவறான அறிவுரை காரணமாகவும், மூட நம்பிக்கை காரணமாகவும் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது