districts

புதிய பேருந்து நிலையத்தில் தரைக்கடை அமைக்க அனுமதி இல்லை கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கும்பகோணம், ஜூன் 5 - பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத  வகையில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி  விற்பனையை சிறு வியாபாரிகள் செய்து  கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர்  செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கும்பகோணத்தில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை கள் ஆகியவற்றில் வைத்து விற்பனை செய்யும் போது சிறு வியாபாரிகள் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு  இல்லாத வகையில் விற்பனை செய்ய வேண்டும். தற்கால சூழலுக்கு ஏற்ப வாடகை உயர்த்தப்பட்டு இருப்பதால் உயர்த்தப்பட்ட வாடகையை உரிய மாநகராட்சி ஊழியரிடம்  செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கள் வைத்திருப்பதை சிறு வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். மேலும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தரைக்கடை அமைக்க அனுமதி இல்லை. வியாபாரத்தின் போது ஏற்படும் கழிவுகளை அவரவர்களின் சொந்தப் பொறுப்பில் எடுத்து வேறு இடத்தில் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.