தஞ்சாவூர், ஜூன் 5- நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமாருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இருந்த போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், அதன் நிர்வாகிகள், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கைக் கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர், எம்எல்ஏ என்.அசோக்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.