தஞ்சாவூர், ஜன.10- பேராவூரணி ஒன்றியத்தில் நடை பெற்ற சாதி ஆணவப் படுகொலை க்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறி ஞர் கே. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் என்.சிவகுரு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
“தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, பேராவூரணி ஒன்றியம் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்-நளினி ஆகியோரின் மகன் நவீன்குமார் (பட்டியல் வகுப்பு). பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த நெய்வவிடுதி கிராமம் பெருமாள்-ரோஜா ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா. இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திருப்பூர் சென்று ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 31.12.2023 அன்று நண்பர்களின் உதவியோடு, திருப்பூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் செய்த புகைப்படத்தை நண்பர்கள் முகநூலில் வெளியிட்டுள்ளனர். முகநூலில் திருமண புகைப்படத்தை பார்த்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் உறவினர்கள் திருப்பூர் சென்று பல்லடம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
பெற்றோருடன் அனுப்பிய பல்லடம் காவல்துறை
இதையடுத்து, நவீன்குமார்-ஐஸ்வர்யாவை காவல்துறையினர் தேடிச்சென்று, “ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகள் காணாமல் போய் விட்டார் என்று புகார் கொடுத்துள் ளார்கள்” என்று சொல்லி ஐஸ்வர்யாவை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். நவீன்குமார் பின்தொடர்ந்து சென்று காவல் நிலையம் வெளியில் நின்று உள்ளார். பல்லடம் காவல்துறையினர் பெண்ணை பிரித்து பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். ஊருக்கு ஐஸ்வர்யாவை, அழைத்து வந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் அவரது உறவினர், 2.1.2024 அன்று இரவு ஆணவப் படுகொலை செய்து 3-ஆம் தேதி அதிகாலையிலேயே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். அந்த பெண் படுகொலை செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜன7 ஆம் தேதி இச்செய்தி அறிந்து காவல்துறை நவீன்குமார் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கும் சென்று விசாரித்துள்ளது. நவீன்குமார் போலீசில் புகார் கொடுக்கிறார். இதன் பிறகு ஊடகங்கள் மூலம் செய்தி வெளிவந்த பின்னர் தான் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்க!
இச்சாதிய ஆணவப்படுகொலை தஞ்சை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் அறிந்ததும்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மாவட்ட நிர்வாகிகளான, மாவட்டத் தலைவர் கே.பன்னீர் செல்வம் மாவட்ட துணைத் தலைவர் கே.அபிமன்னன், மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.வாசு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், துரை.ஏசுராஜா உள்ளிட்டோர், பூவாளூர் கிராமத்திற்கு சென்று, நவீன்குமாரின் உறவினர்களை சந்தித்து விசாரித்தோம்.
அதன் பிறகு வாட்டாத்திக் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற போது, அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரித்து கொண்டிருந்தார். எஸ்.பியிடம் பேசியபோது விசாரித்துக் கொண்டிருக்கிறோம். நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். நவீன் குமார் காதலித்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்து இருக்கிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் மிகக் கொடூரமாக படுபாதக கொலை யை செய்திருக்கிறார்கள். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை கொலை செய்ததற்கான வழக்குப் பதிவு செய்து விட்டு எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட த்தின் கீழ் வழக்கு பதியப்படவில்லை.
பல்லடம் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
போலீஸ் தரப்பில் விசாரித்த அடிப்படையில் பல்லடம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பல்லடம் காவல் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல், ஐஸ்வர்யாவை பாதுகாப்பின்றி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்ததன் விளைவாகத்தான் ஐஸ்வர்யா படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார்.
தொடர்ச்சியாக தமிழகத்தில் சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் அலட்சியமாகவும் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு ஆதரவாகவும், ஐஸ்வர்யா - நவீன் குமாரை பிரித்து அனுப்பிய பல்லடம் காவல் நிலைய அதிகாரிகளை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க வேண்டும். தற்போது ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் தாயை காவல்துறை கைது செய்துள் ளது சரியானது.அதே நேரத்தில், எஸ்.சி., எஸ். டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் ஐஸ்வர்யாவின் மரணத்திற்கு காரண மான முக்கிய குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நவீன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தஞ்சை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட, தனி சிறப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.