நூறு ஆண்டு கால மயானபாதை பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னின்று நடத்திய போராட்டம் வெற்றி அடைந்துள்ளது, தொடர் போராட்டத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் 10 அடி பாதை அமைத்து கொடுத்துள்ளது .
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி ஊராட்சி கண்ட பிராயன் வளவு போயர் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாதை வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு மனிதர்களே பிரேதங்களை தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இப்பிரச்சனை சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு ஊர்மக்கள் எடுத்துச் சென்றனர். அதனடிப்படையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மயானத்திற்கு பிரேதங்களை எடுத்துச் செல்ல பாதை அமைத்துத் தரவேண்டும் அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சியின் தலைமையில் மயானத்திற்கு பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பிரச்சனை சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தைக்கு முன் வராத நிலை நீடித்து வந்தது.
இதன் ஒரு பகுதியாக இந்த பகுதியில் வாழ்ந்துவந்த மேனகா (வயது 30 )கணவர் பெயர் ராஜேஷ் கண்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரின் பிரேதத்தை எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கிளை செயலாளர் முருகன் முன்னிலையில் பாதை வசதி ஏற்படுத்தி தர வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் வருவாய் துறையினர் பாதையை ஏற்படுத்தி தர ஒப்புக் கொண்டு பின்பு பாதையை ஏற்படுத்தி தர முடியாது என தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மக்கள், பாதை அமைக்க தாமாகவே முன்வந்தால் அப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது.
சம்மந்தப்பட்ட இடம் கூட்டு பட்டாவில் இருந்தது. அதனால் அரசு தரப்பில் பாதை அமைக்க முடியாது என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். பிரச்சனை சம்பந்தமாக பாதுகாப்புக்கு வந்த காடையாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் "எப்பொழுதும் கையில் தானே தூக்கி செல்வீர்கள் இப்போதும் கைகளில் தூக்கி செல்லுங்கள்" பிரச்சனை செய்யாதீர்கள் பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என ஊர் பொதுமக்களிடம் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராட்டத்தை நடத்த முன்வந்தனர். பாதை அமைத்து தராவிட்டால் பிரேதத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விடுவோம் என எச்சரித்தனர்.
அதன் பின்பு பணிந்த காவல் துறையும், வருவாய்த் துறையும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேசி பாதையை அமைக்க வந்தனர். பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் 10 அடி அகல சாலை அமைக்க உதவி தாசில்தார் கோவிந்தராஜ் கிராம நிர்வாக அலுவலர்கள் கணபதி, திரவியம், ராஜ்குமார் , ஆகிய வருவாய்த்துறை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலம் செங்கொடி ஏந்திய வாகனத்தில் நடைபெற்றது.
மேலும் 100 ஆண்டுகால பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று சரிசெய்து பாதை அமைத்து உள்ளனர் எனவும், தங்களது உறவினர் இறந்தது வருத்தத்தைத் தந்தாலும் இனி தங்களுக்கு நிரந்தர பாதை அமைத்து கொடுக்க போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வரன், கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் கே. செல்வகுமார், எம்.சேகர்,மகேஸ்வரி, எம். சுப்பிரமணி, எம்.சின்ராஜ், மேற்கு மாநகர குழு உறுப்பினர் ஆர்.கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.