சேலம், ஏப்.25- சேலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தெற்கு காட்டுக் கொட்டாய் சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், இதுபற்றி தினேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். இதில், ஆத்திர மடைந்த தினேஷ்குமார், சிறுமியை வீட்டின் முன்பு வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். 2018 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் நகர காவல் துறையினர் தினேஷ் குமார் மீது போக்சோ, கொலை, வன்கொடுமை உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது, விசாரணை திங்களன்று முடிந்த நிலையில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் தினேஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார். மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராத மும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அந்த அபராதத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டார்.