பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மே 9-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசு தலைமை வகித்தார்.
கூட்டத்தின் முடிவில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது, அரசு ஊழியர்களுக்கு கோவமும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.
நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் மே 9 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து வாகன பிரசாரம் செய்யப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து ஜூலை 2 ஆம் தேதி கோரிக்கை முழக்க கருத்தரங்கங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று கூறியதுடன், தொடர்ந்து ஜூலை மூன்றாவது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் தர்னா போராட்டம் நடத்தப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் லட்சம் பேர் பங்கேற்கும் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்றார்.
நடப்பு சட்டப்பேரவைத் தொடரிலேயே திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று செல்வம் கேட்டுக்கொண்டார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் மு.அன்பரசு மாநில பொருளாளர் பாஸ்கரன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.