districts

img

புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சேலம் மையனூர் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க டாஸ்மார்க நிர்வாகம் முயற்சி செய்ததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகர வடக்கு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகர் மெய்யனூர் இட்டேரி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை புதியதாக அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளது. மதுக்கடை அமையும் இடத்திற்கு அருகே மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை , மின்வாரிய அலுவலகம் , மயானம் , தனியார் மருத்துவமனை , பல்வேறு சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சாதாரண ஏழைமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் உள்ளது.

ஏற்கனவே ஊருக்குள் நுழையும்போதே ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில் ஊருக்குள்ளேயே இன்னொரு மதுக்கடை எதற்காக. என்ற கேள்வியுடன், இந்த மதுக்கடை அமைந்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகும் . அதேபோல் அங்குள்ள நிறுவனங்களுக்கும் , குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் . மயானத்திற்கு வருவோர், மின்வாரிய அலுவலகத்திற்கு வருவோர், தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் இடையூறு ஏற்படும்.

எனவே, மேற்படி மதுக்கடையை  எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடக்கு மாநகர செயலாளர் ஆர்.குருபிரசன்னா தலைமையில்  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மூர்த்தி, புருஷோத்தமன்,  முன்னிலை வகித்தனர்.

இதில் சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ், மாநகர தலைவர் பி.சதீஷ்குமார், நிர்வாகிகள் ஆர்.வி.கதிர்வேல், எஸ்.சசிகுமார்,கே.நாகராஜ், உள்ளிட்டு சிபிஎம் மாநகர குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்

அதன் பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,

மதுக்கடை உறுதியாக வராது என வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் உறுதியளித்தனர்.  மேலும் அதேபகுதியில் ஏற்கனவே உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்தனர்.  

மாநகர கிழக்கு

சேலம் உடையாப்பட்டி பைபாஸ் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள அரசு மதுக்கடை  உச்சநீதிமன்றத்தின் வழி காட்டுதலை மீறி செயல்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் தகவல் மூலம் தெரியவருகிறது. வாலிபர் சங்க சேலம் கிழக்கு மாநகரம் சார்பில் சம்மந்தப்பட்ட மதுக்கடை அருகே வைத்துள்ள தட்டியில் மதுக்கடையாகிய நானே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறேன். என்னை இப்பகுதியில் இருந்து அகற்றுங்கள் என மதுக்கடையே மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பது போல் வாசகம் அடங்கியிருக்கும் பேனர் பொதுமக்களை கவனிக்க வைத்துள்ளது.