districts

img

மகுடஞ்சாவடி: குடிசை வீட்டில் தீ – மாற்றுத்திறனாளி உயிரிழப்பு  

மகுடஞ்சாவடி அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளார்.  

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் அரண்மனை காடு பகுதியைச் சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி தங்கமணி (28) மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு அகல்யா(6) என்ற பெண் குழந்தை உள்ளது.  இன்று காலை சக்திவேல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தாய் தங்கமணியும், மகள் அகல்யாவும் இருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றி எரிந்தது. தங்கமணியின் மாமியார் அகல்யாவை தீக்காயத்துடன் காப்பாற்றினார். தங்கமணியை மீட்க முடியவில்லை.

இந்த சம்பவம் அறிந்து வந்த சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தங்கமணி உடல் கருகி உயிரிழந்தார்.  

இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால் தீ பிடித்ததா? அல்லது தங்க மணி குடும்ப தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

;