சென்னை மாநகராட்சியின் 155வது வட்டத்தில் உள்ளது ராமாபுரம். இங்கு 27 ஏக்கர் பரப்பளவு (சர்வே எண் 239) ஏரி இருந்தது. இந்த ஏரியையொட்டி நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவசாயம் நடை பெற்றது. நகர வளர்ச்சியால் விவசாயம் நிலங்கள் குடியிருப்புகளாக மாறின. ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்களும் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால் ஏரியின் பயன்பாடு அற்றுப்போனது. ஊராட்சி மன்ற தீர்மானத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு ஏரியின் ஒருபகுதியை தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் (நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) எடுத்துக் கொண்டு குடியிருப்பு பகுதியாக அறிவித்தது. ஏரியின் பெரும்பகுதி சாலை, அரசு கட்டிடங்கள், எஸ்ஆர்எம் கல்லூரியின் ஆக்கிர மிப்புகளாக மாறிவிட்டன. இதனால் ஏரியின் பரப்பளவு இரண்டரை ஏக்கராக சுருங்கியது. அந்த பகுதியை பெருநகர சென்னை மாநகராட்சி சீரமைத்து, நடைபாதையுடன் சுற்றுச்சுவர் அமைத்து பராமரித்து வருகிறது. ஏரி அமைந்துள்ள சர்வே எண் 239 மூன்றாக பிரிக்கப்பட்டது. 239/1, 239/3 நத்தம் புறம்போக்கு என வகைமாற்றம் செய்து குடியிருப்புக ளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதில் 239/1 பெரியார் சாலையின் ஒரு பகுதி குடியிருப்புக ளுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
பாரதி சாலை நீர்நிலைகளின் நிலை? நாளை கவன ஈர்ப்பு போராட்டம் |
சர்வே எண் 239/2ல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதியோடு 1994 ஆம் ஆண்டு 276 குடும்பங்களுக்கு தலா 600 சதுர அடி வீதம் மனைகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான தொகையை ஒதுக்கீடுதாரர்கள் மாத தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரத்தை பெற்றனர். அதனை வைத்து பலரும் பட்டா பெற்றுள்ளனர். பாரதி சாலையில் (தற்போதைய வளசரவாக் கம் காவல் நிலையம்) 77 குடும்பங்கள் வசித்து வந்தன. 2001 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடியிருப்புகளை அகற்றியது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து 77 குடும்பங்களுக்கு சர்வே எண் 239/2இல் வருவாய்த்துறை தலா 400 சதுர அடி மனையை மாற்று இடமாக வழங்கியது. இவ்வாறாக திருமலை நகர் உருவானது. இந்த குடியிருப்புகள் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதாக ராமாபுரம் சோஷியல் வெல்பேர் பெடரேஷன் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இதனால் சென்னை மாநகராட்சி குடியிருப்புகளை அகற்ற அடுத்தடுத்து நோட்டீஸ் கொடுத்து, வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்க முயற்சித்து வருகிறது. அதனை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துன்புறுத்தப்படுகிறோம்
இதுகுறித்து திருமலை நகர் வீட்டு உரிமையாளர்கள் பொது நலச்சங்கத்தின் தலைவர் இ.ரவி குறிப்பிடுகையில், “திருமலை நகரில் 21 தெருக்கள் உள்ளன. இங்குள்ள வீடுகள் அனைத்தும் அரசு ஒதுக்கீட்டின்படி அமைந்தவை. மாற்று இடம் பெற்றவர்களை தவிர மற்றவர்கள் நிலத்திற்கான தொகையை செலுத்தி கிரயப் பத்திரம் பெற்றுள்ளனர். அதை வைத்து பலரும்பட்டா வாங்கி உள்ளனர். ஒரு சிலர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழும், ராமாபுரம் வீட்டுவசதி கடன் சங்கத்தின் வாயிலாக கடன் பெற்றும் வீடுகளை கட்டியுள்ளனர். இந்தப் பகுதியை தற்காலிக குடியிருப்புகள் கொண்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மாநகராட்சி அடுத்தடுத்து நோட்டீஸ் கொடுத்து, கடைகள் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க முயற்சித்து வருகிறது. நாளிதழ்களில் செய்தி வந்த பிறகே வழக்கு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் குடிசை மாற்று வாரியமும், வருவாய்த்துறையும் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆகவே, வழக்கில் இணைந்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். அதிகாரிகளின் தவறால் மக்கள் துன்பப்படுகின்ற னர். அரசு ஒதுக்கிய நிலம் எப்படி ஆக்கிரமிப்பாகும்?” என்று கேள்வி எழுப்பினார்
வகை மாற்றி பட்டா வழங்கு - எஸ்.குமார் |
நீதிமன்றத்தில் தவறான தகவல்களின் அடிப்படையில் தொடரப்பட்ட பொய் வழக்கை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்தனர். இதனை மக்கள் ஒன்றுபட்டும், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டு அனைத்து கட்சியினரும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தியதோடு, பட்டா வழங்க கோரி மனு கொடுத்தோம். முதலமைச்சர் தொடங்கி மண்டல அதிகாரி வரை மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் குடியிருப்பை பாதுகாக்க திருமலை நகருக்குட்பட்ட (சர்வே எண்: 239/2ல்) மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் 77 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்திற்கும் நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் பணம் செலுத்தி பெறப்பட்ட வீட்டுமனையில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். ராமாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு தடையை நீக்கி பட்டா வேண்டும். -வி.தாமஸ் |
வழக்கே தவறானது
“அரசு ஒதுக்கீடு செய்து, பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று நோட்டீஸ் கொடுக்கின்றனர். கூட்டமைப்பு என்ற பெயரில் ராஜா, பால்தாஸ் ஆகியோர் தவறான தகவல்களை கொடுத்து பொது நல வழக்கை பதிந்துள்ளனர். (இதில், பால்தாஸ், சர்வே எண் 110ல் நீர்நிலை புறம்போக்கில் உள்ள தனது குடியிருப்புக்கு பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது) இந்த வழக்கே தவறானது. ஆகவே, நில வகை மாற்றம் செய்து குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக் குழு உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரு மான ரத்தினகுமரன் கூறினார். “எஸ்ஆர்எம் கல்லூரியின் 2 முகப்புகள், சுற்றுச்சுவர் ஏரியை (சர்வே எண் 239ல்) ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 2006-11ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் முன்முயற்சி எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி னார். அதன்பிறகு மீண்டும் அதே இடத்தில் முகப்பும், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வாழ்வாதாரத்தை பறிக்கலாமா?
“பாரதி நகரில் வசித்த எங்களை 2001 ஆம் ஆண்டு நேதாஜி நகரில் மாற்று இடம் கொடுத்தார்கள். இந்த 21 ஆண்டுகளில் வாழ்க்கையில் சேமித்த மொத்த பணத்தையும் போட்டு வீடுகளை கட்டியுள்ளோம். குழந்தை களின் படிப்பு, வாழ்வாதாரம் என மொத்தமும் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. பொய்யான காரணம் கூறி வழக்கு போட்டுள்ளார்கள். வழக்கு போட்டவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு களுக்கு பட்டா வழங்க உத்தர விட வேண்டும்” என்று துரையரசன் கோரிக்கை விடுத்தார்.
எங்களுக்கும் செய்ய வேண்டாமா?
“3 தலைமுறைகளாக பெரியார் சாலையில் வசித்து வருகிறோம். ஒருபகுதி குடியிருப்புகளுக்கு பட்டா கொடுத்தனர். மற்றொரு பகுதிக்கு தரவில்லை. வாழ்ந்து முடித்த காலத்தில் எங்கே சென்று வாழ முடியும். இனி உழைக்கத்தான் முடியுமா? ஏதாவது இடந்தான் வாங்கி வீடுதான் கட்ட முடியுமா? அரசு இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா? தண்ணீர் வரி முதற்கொண்டு அனைத்து வரிகளையும் கட்டுறோம். முதலில் சர்வே எண் 234 என்று பீம் நோட்டீஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு சர்வே எண் 239 என மாற்றியுள்ளார்கள். பூ, காய்கறி விற்று, கூலி வேலைக்கு சென்று பிழைக்கிறோம். இங்கிருந்த குடிசை வீடுகளுக்கு எம்ஜிஆர் இலவச மின்சாரம் கொடுத்து, ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தார். கழிவுநீர் இணைப்பெல்லாம் கொடுத்துள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு வீட்டை கட்டியிருக்கிறோம். யார் தூண்டுதலோ தெரியவில்லை, மொத்தமாக காலி செய்ய சொல்கிறார்கள். எஸ்ஆர்எம் காலேஜூக்குள் ஒரு ஏரியே (சர்வே எண் 222) மடக்கி வச்சி இருக்காங்க. அதை யெடுக்காம, மக்கள் வாழ்கிற இடத்தை காலி செய்ய சொன்னால் எங்கே போக முடியும்? நோட்டீஸ் வந்ததுல இருந்து மன உளைச்சலா இருக்கு. 60 வருசமா வாழற மக்களுக்கு பட்டா கொடுக்காம இருந்துட்டு, ஆக்கிரமிப்பு என்றால் என்ன அர்த்தம்?” என்று பெரியார் தெரு மக்கள் குமுறுகின்றனர். “குடிசை கட்ட கூட உடம்புல சத்து இல்ல. முதலமைச்சர் நல்லாத செஞ்சிட்டு வராரு. எங்களுக்கு பட்டா கொடுக்க கூடாதா? வீட்டை விட்டு வெளியேற்றுவது சாகடிப்பதற்கு சமம். அதை அரசு செய்யக்கூடாது முதலமைச்சர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக் கையோடு இருக்கிறோம்” என்று மூவேந்தர் தெருவை சேர்ந்த 70வயது முருகேசன் கண்ணீர் மல்க கூறினார்.
அரசுக்கு ஒரு நீதியா?
“அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு ஆக்கிரமிப்பு என்று கூறலாமா? அரசுக்கு தேவைக்கு பயன்படாத குளம், ஏரிகளில் கட்டிடங்களை கட்டுகிறது. ராமபுரத்தில் உள்ள பேருந்து நிலையம், இ-சேவை மையம், கவுன்சி லர் அலுவலகம்,தீயணைப்பு நிலையம் போன்றவை நீர்நிலையில்தான் உள்ளது. தேவையில்லாத இடத்தை தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துகிறோம். அதேமாதிரி மக்கள் வாழ்கிற இடத்தை மக்களுக்கே தரனும்” என்று டேவிட் கோரினார். “மனைகள் பிரித்து கொடுத்தவுடன், ஆவணங்களில் நிலத்தின் வகையை மாற்றி இருக்க வேண்டும். அதிகாரிகள் கடமையை செய்யாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்னர். இந்த பகுதியில் அங்கன்வாடி மையம், தண்ணீர் தொட்டி, அம்மா உணவகம் போன்றவற்றை அரசே அமைத்துள்ளது. இவ்வளவையும் செய்துவிட்டு ஆக்கிரமிப்பு என்று கூறுவது பொருத்தமற்றது.” என்று குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். அல்லல்படும் மக்களுக்கு அரசு பட்டா வழங்குமா?
- எஸ்.கவாஸ்கர்