districts

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை கோவிலில் வீசியவர்கள் யார்?

வெம்பாக்கம், ஏப். 18- தூசி அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை கோவிலில் வீசி சென்றவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அனுமந்த பேட்டை பகுதியில் தூசி காவல் நிலையம் உள்ளது. அதன் எதிரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது, அங்கு ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து தூசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வந்து குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை வேலியில் போட்டுச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

;