விழுப்புரம், ஜூலை 5- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி அருகே துறவி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை கிராம மக்கள் ஓட விட்டனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 100- க்கும் மேற்பட்டோர் துறவி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேறு ஒரு கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் அமைச்சரை ஒருமையில் திட்டினார். இதையடுத்து, திமுகவினர் நாம் தமிழர் கட்சியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர். இதனால், வாக்குவாதம் கைகலப்பு வரைக்கு சென்றதால் பதட்டம் அதிகரித்தது. பிறகு, கிராம மக்கள் நாம் தமிழர் கட்சியினரை விரட்டியடித்தனர்.