விழுப்புரம், மார்ச் 24- செஞ்சி அருகே துத்திபட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலி யுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்குட்பட்டது துத்திப்பட்டு. இக்கிராமத்திலுள்ள சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளி லிருந்து வெளியேறும் கழிவுநீர், செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. அதனால் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேறும், சகதியு மான சாலையில் நாற்று நட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி வட்டாட்சியர் மெகருன்னிசா துத்திப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இருப்பினும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என தெரிகிறது. அதனால் கோப மடைந்த அப்பகுதி மக்கள் துத்திப்பட்டு கிராமத்திலுள்ள பிரதான சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து அனந்தபுரம் காவல்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.