districts

img

வீரளூர் வன்முறை: அருந்ததிய மக்களை தாக்கிய 25 பேர் கைது

தி.மலை,ஜன. 29- திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பு களை தாக்கிய வழக்கில் இதுவரை 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி சுடுகாட்டிற்கு செல்லும் பொதுப்பாதையை அருந்ததியர் சமுதாயத்தினர் பயன்படுத்தியதால் பிரச்சணை ஏற்பட்டது. அப்போது அருந்ததியர் சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆதிக்க சக்தியினர் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கே.சாமுவேல்ராஜ், விசிக, தலித் விடுதலை இயக்க நிர்வாகிகள் நேரில் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நேரில் ஆய்வு நடத்தியது. அதனைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹால்டர் வீரலூர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.  அப்போது அவர் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் வீரளூரில் நடந்த கலவரத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் போளூர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.  அதேபோல், கலசபாக்கம் வட்டாட்சியராக பணிபுரிந்த ஜெகதீசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு மாற்றாக  திருவண்ணாமலை தனி வட்டாட்சியராக (குடிமைப் பொருள்) பணிபுரிந்து வந்த உதயகுமார் கலசபாக்கம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை கண்டறிந்து கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.