யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் தென் பகுதிக்கு அப்பால் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காரைக்கால். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய காரைக்கால் மாவட்டம், இன்னுமும் பின்தங்கியே உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அங்கமாக உள்ள காரைக்கால் மாவட்டம், கடைமடை பகுதியாகும். விவசாயமே பிரதான தொழில் என்றாலும் மாவட்டத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகவே உள்ளது. மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டார் அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு, காரைக்கால் அரசு மருத்துவமனை ஒரு கிளை மருத்துவமனையாகவே இருந்து வருகிறது. எவ்வித உள்ள கட்டமைப்புகளையும் மேம்படுத்த முடியவில்லை. அதே நிலை தொடர்கிறது. அவசரத்திற்கு உயிர்காக்கும் மருந்துகள் கிடையாது. போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு செல்லும் அவலம் தொடர்கிறது. மேலும், காரைக்கால் பகுதியில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக நலச் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல, ஏழை-எளிய மக்கள், தலித் மக்கள் தங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச மனைப்பட்டா வேண்டும் என்றால்கூட புதுச்சேரிக்கு தான் செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் இருந்தும் அதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. புதுச்சேரி அரசு சார்பில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. கடைமடை பகுதியான காரைக்காலுக்கு உரிய காவிரி நீர் 2 டிஎம்சி தண்ணீரை கூட கிடைப்பதில்லை. எனவே தான், காரைக்கால் மாவட்டத்தில் வளர்ச்சியில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.