தஞ்சாவூர், ஆக.5 - தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி மாணவர்களின் சார்பில், செங்களூர் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புவி வெப்பமயமாதலால் பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, உலகம் முழுவதும் பேராபத்தில் சிக்கித் தவிக்கிறது. எனவே மரங்களை நட்டு மண்ணைக் காப்பது என்ற நோக்கில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியின் 2 ஆம் ஆண்டு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமையொட்டி, கந்தர்வ கோட்டை அருகே உள்ள செங்களூர் கிராமத்தில், புதிய வனம் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் டாக்டர் ஆர்.பிரசாத் மற்றும் கே.கரி மனிஷா ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியின் இயக்குநர் பி.பாண்டியராஜன், கல்லூரி முதல்வர் எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி, செங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களை மீட்கும் வகையில் நூறு பனை விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், மா, பலா, பூவரசன், சந்தனம், குமிழ், வேம்பு போன்ற 350 மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கிராமங்களில் தேங்கி இருந்த நெகிழிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.