districts

img

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் இடமாற்றம்

விழுப்புரம்,நவ.24- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி  திருப்பச்சாவடிமேடு மற்றும் கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு தாமதமாக வருகை புரிந்த இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை (நவ.24) அன்று அரசு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பச்சாவடிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரண்டு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, மளிகைப் பொருட்களின் தரம் மற்றும் உணவின் தரத்தையும் பரிசோதனை செய்தார். அதனைத் தொடர்ந்து பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்கீழ், கற்பிக்கப்பட்ட பாடல் மற்றும் கதைகள் குறித்து கேட்டறிந்தார்.  கோவிந்தபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி, ஆசிரியை மாலதி ஆகியோர் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு வரவில்லை. இதனால், இந்த இரு ஆசிரியர்களையும் பணியிடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.