விழுப்புரம், மே 25-
விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (55). விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த 19ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.
பின்னர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.