districts

img

அனல் மின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்கள் வேலைகேட்டு போராட்டம்

சிதம்பரம், அக்.10- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பஞ்சங்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.    இந்த அனல்மின் நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டது.  நிலங்களைக் கையகப்படுத்தும்போது நிலம் கொடுத்த அனைவருக்கும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலையென உத்தரவாதத்துடன் இடங்களைக் கையகப்படுத்தியது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அப்பகுதியில் உள்ள பஞ்சங்குப்பம் கரிக்குப்பம், இந்திரா நகர், மின் நிலையத்திற்கு சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இதுவரை வேலை வழங்கவில்லை.   இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்க ளாக  இடம் கொடுத்தவர்களுக்கு வேலை கேட்டு  இடம் கொடுத்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் அனல் மின் நிலைய வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலை யில் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் கூறுகையில், அனல் மின் நிலையம் அமைக்கும்போது கொடுத்த வாக்குறுதியை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனல் மின் நிலையம் வேண்டாமென மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. மின்நிலைய நிர்வாகம் உடனடியாக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என சிபிஎம் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.