districts

img

தூத்துக்குடி: உப்பள நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில்  உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம், கோவளம் பசுவந்தாரை தன் பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்தனர்.  அப்பொழுது அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு கிராமத்தில் உள்ள உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அதை தமிழ்நாடு அரசு முழுமையாக கைவிட  வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாகவும், இது தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் எனவும் தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.  கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது வரவேற்ககூடியதுதான். ஆனால்,  கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அது இருக்கக்கூடாது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதாவது, கடந்த 90 வருடங்களாக தூத்துக்குடி உப்பு உற்பத்தி தொழிலில் முள்ளக்காடு கிராமத்தில் இருக்கக்கூடிய 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.  சுமார் 2000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது;  ஒரு வருடத்திற்கு நாலு லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது; அதில் ஒன்றரை லட்சம் டன் வெளிநாட்டிற்கும், 2.50 லட்சம் டன்  வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டிற்கு உப்பு ஏற்றுமதி செய்வதில் அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது.  உப்பு வார் முதல் செய்யும் தொழிலாளர்கள் உட்பட உப்பு சார்ந்த பல்வேறு தொழில்களில் சுமார் 15,000 பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

கப்பல் கட்டும் தளம் முள்ளக்காட்டு பகுதியில், உப்புத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறிய அளவு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் உள்ளிட்ட 15,000 தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன்,  முள்ளக்காடு, முத்தையாபுரம், கக்கன்ஜி நகர், ஹோட்டல் காடு, ஸ்ரீ கணேஷ் நகர், மு சவேரியார்புரம், ராஜீவ் நகர், சாமி நகர், பாலாஜி நகர், ஆ.தங்கம்மாள்புரம் முதலிய கிராமங்களை சுற்றி சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும், உப்பளங்கள் உள்ள இடங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நிலங்கள் வழியாகத்தான் பேய்குளம், குலையன், கரிசல்குளம், பெட்டை, குளத்திலிருந்து மழைக் காலங்களில் வெளியேறும் வெள்ள நீர் கடலில் சென்றடைகிறது. அந்த வடிகால் இல்லாவிடில் சுத்தியுள்ள குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து பேரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அப்பகுதியை கையகப்படுத்துவதை கைவிட்டு, தூத்துக்குடி வடக்கே வைப்பாறு கிராமம் சர்வே.எண்.989 இல் உள்ள சுமார் 1200 ஏக்கரையும், கடற்கரையை ஒட்டியுள்ள தரிசு நிலங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சர்வே எண்களில் உள்ள சுமார் 2000 ஏக்கர் தரிசு நிலங்களையும் கப்பல் தளம் கட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது