districts

img

விவசாயிகள் சங்க போராட்டம் எதிரொலி ஓசூர் அருகே அமையவிருந்த டாஸ்மாக் கடை தடுத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி, ஆக. 2- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், முகலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெ. காருப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் கூட்டூர் செல்லும் வழியில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் பணிகள் துவக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் திம்மா ரெட்டி தலைமையில் ஓசூர் சாராட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.  மதுபான கடை திறப்பதற்கு முடிவு செய்த பகுதியில் கிரானைட், ஜல்லி கிரசர்கள் இயங்கி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. முகலூர், காருப்பள்ளி, செட்டி பள்ளி மாசி நாயனப்பள்ளி, முது கானப் பள்ளி ஆகிய கிராம ஊராட்சி மன்றங்களை சேர்ந்த பொது மக்களும் மாணவர்களும் இந்த வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றனர். எனவே, விபத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உள்ளதால் மதுக்கடை திறப்பதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் டி.பரந்தூர்-முகலூர் கூட்டு ரோட்டு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஜி.திம்மா ரெட்டி தலைமையில் ஆக.2 வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் ஆனந்தகுமார், முகலூர்,செட்டி பள்ளி,மாசிநாயக்கனப்பள்ளி, முது கானப்பள்ளி, காரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்கள் மகேஷ்,மஞ்சுநாத் சகுந்தலா சீனிவாசன்,மஞ்சம்மா ரமேஷ், அஸ்வினி ரவி, முன்னிலை வகித்தனர்.  விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ்,பொருளாளர் எம்எம்.ராஜூ மாவட்ட குழு உறுப்பினர் ராஜா,ஊர் பெரிய மனிதர்கள் (கவுண்டர்)முகலூர் பில்லப்பா, கிருஷ்ணப்பா,பாரந்தூர் வெங்கடசாமி ரெட்டி,செட்டி பள்ளி ஜெயராம் ரெட்டி கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்ட களத்திற்கு வருகை தந்த தேன்கனிக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர்,  ஓசூர் துணை வட்டாட்சியர், டாஸ்மாக் அதி காரிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அரசு மதுபானக் கடையை முகலூர் அருகே கூட்டூர் பகுதியில் அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.