districts

img

“ உழைக்கும் மக்களின் உரிமைக்காக நின்ற செங்கொடி” - எஸ்.கீதா சிபிஎம் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 24வது மாநாடு முதன்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை கோலாகலமாக நடத்த வரவேற்புக் குழுத் தோழர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன்-சரஸ்வதி ஆகியோரின் மகளாகிய நான், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். மூத்த தோழர்கள் ஜி.ஆனந்தன், ஆர்.ராமமூர்த்தி கலியன் ஆகியோர் என்னை வளர்த்தெடுத்தனர். தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள விழுப்புரம், பெரும்பாலும் கிராமப்புறங்களைக் கொண்ட மாவட்டம். கிராமப்புறப் பெண்கள் விவசாயக் கூலிகளாகவும், நூறு நாள் வேலைத் திட்டத்திலும் பணியாற்றி குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். 25 வகையான  தீண்டாமைக் கொடுமைகள் வடமாவட்டங்களில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏழு மாவட்டங்களில் விரிவான ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் சந்திரா அளித்த 15 நாள் பயிற்சியின் பின்னர் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான தீண்டாமை நடைமுறைகள் கண்டறியப்பட்டன. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு பட்டியலின இளைஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடூரமும், பட்டியலின பஞ்சாயத்துத் தலைவருக்கே தனி டம்ளர் வழங்கப்பட்ட அவலமும் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் 15,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. கட்சியின் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாதர் சங்கத் தலைவர்கள் சுதா சுந்தரராமன், வாசுகி, தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் தீர்மானங்களையும், கள ஆய்வின் முடிவுகளையும் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தபோது, முதலில் மறுத்த நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களால் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டது.

நீதி கேட்டு பெரும் போராட்டங்கள்

கள்ளக்குறிச்சி கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் தொடர்ந்து போராடி வருகின்றன. சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தோழர்கள் காவல்துறையால் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடியடி மற்றும் கைது நடவடிக்கைகளையும் மீறி பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனிப்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைப் பெண்கள் ஆகியோரின் நிலை குறித்து கட்சியும் மாதர் சங்கமும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தின. வருமானமின்றி வாடும் இப்பெண்கள் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்வதும், சிலர் ஏமாற்றப்படுவதும் கண்டறியப்பட்டது. இவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டின் விளைவாக, நூறு நாள் வேலைத்திட்டத்தில் முன்னுரிமையும் கூலி உத்தரவாதமும் கிடைத்துள்ளது. பழங்குடி மக்கள் நலன் காக்க.... காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக இருளர் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டம் விழுப்புரம். இவர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு, அடிப்படை வசதிகள் வழங்கக் கோரி கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் வெற்றி கண்டுள்ளன. இஸ்லாமிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் கட்சி குரல் கொடுத்து வருகிறது. பர்தா அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டபோது, இஸ்லாமியப் பெண்களின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது செங்கொடிதான். மாவட்டத்தில் சாதிய அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் என பலர் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுகின்றனர். மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான சிறப்பு மாநாடுகளும் நடத்தப்படுகின்றன. வரும் ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டின் வெற்றிக்காக பெண்களைப் பெருந்திரளாகத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முதன்முறையாக விழுப்புரத்தில் நடைபெறும் இந்த வரலாற்று நிகழ்வை சிறப்பாக நடத்தி, உண்மையான மாற்று சக்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதை தமிழகத்திற்கு உணர்த்துவோம்.

நிலமற்றோருக்கு நில உரிமை!

நிலமற்றோருக்கு நில உரிமை! வானூர் வட்டத்தின் திருச்சிற்றம்பாளையம் பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வந்தனர். சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத இவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய குடிசைகள் அமைத்து வாழ்க்கையை நகர்த்தினர். அரசின் திட்டங்கள், சலுகைகள் எதுவும் கிடைக்காத நிலையில் 23 குடும்பங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல், அறிவுரைகள், உத்தரவுகளை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய கட்சித் தலைவர்களின் தொடர் வலியுறுத்தலால், அதிகாரிகள் ஆய்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முதல் இரண்டு சென்ட் வரை இலவச நில ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கினர். அதேபோல, ஆண்டிப்பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சித்தலம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமுக்கு அடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் சங்கத் தலைவர்கள் எம்.காசிநாதன், ஜி.ராஜ், வி.அர்ஜுனன், கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் விளைவாக மூன்று மாதத்தில் 30 பேரில் 23 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.