திருவள்ளூர், நவ.23- குடிமனை பட்டா, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் கிடைக்காமல் தவிக்கும் இருளர் இன மக்கள் தங்கள் ஜீவாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (நவ.23) ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும், வி.புதூரில் 15 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், கோபாலபுரத்தில் ஏற்கெனவே கொடுத்த பட்டா அடிப்படையில் மனையை அளவீடு செய்து கணினியில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், இங்கு குடிநீர், மின் இணைப்பு சாலை ஆகியவற்றை அமைத்து தர வேண்டும், ஆனந்தவல்லிபுரத்தில் 15 குடும்பங்களுக்கு மனையை அளவீடு செய்து கணினி பட்டாவாக கொடுக்க வேண்டும், தாமரைகுளம் பகுதியில் வாழும் 22 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வீரமங்கலம் பந்திகுப்பத்தில் வாழும் 20 குடும்பங்களுக்கு குடிமனையை அளவீடு செய்து, கணினி பட்டா மற்றும் சுடுகாடு அமைத்து தர வழங்க வேண்டும், எஸ்.வி.ஜி.புரத்தில் கணினி பட்டா வழங்க வேண்டும், எஸ்.பி.கண்டிகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தும் எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்வ தில்லை. இந்த நிலையில் 9 கிராம மக்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (நவ 23), ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் விஜயகுமார் நடத்திய பேச்சுவார்த்தையில், பட்டாக்கள் வழங்க பிரேராணை தயார் செய்து கோட்டாச்சியருக்கு அனுப்ப நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுத்த பட்டாக்களை அளவீடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து டிசம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்துள்ளார். குடிநீர், மின் இணைப்பு, சாலை போன்ற வற்றை அடுத்த ஒரு மாதத்தில் செய்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவ லகம் வெங்கடேசன் எழுத்து பூர்வமாக உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் என்.வஜீரவேலு தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.