districts

img

இருளர் மக்களுக்கு இருப்பிடத்திலேயே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துக மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 22- வாக்கு பதிவு இயந்திரங்களை இருளர் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்களுக்கு தேர்தல் எப்போது நடக்க உள்ளது என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளனர். தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்ற விவரமும் தெரியவில்லை என்கிறார்கள்.திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி,  இருளர் இன மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஏரிக்கரை , குளம்,  ஓடை போன்ற ஒதுக்கு புறத்தில் வாழ்வதால், தேர்தல் அலுவலர்கள் அவர்களின் வாழ்விடத்தை தேடிச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது என்கிற விவரம் கூட  தெரியாமல் உள்ளனர். இந்நிலையில் மகளிர் திட்ட (TNSRLM) பணியாளர்கள் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினால் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஏதுவாக இருக்கும். வாக்கு பதிவு இயந்திரங்களை இருளர் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கே கொண்டு சென்று செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும். என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.