ராணிப்பேட்டை, அக். 8 - ஒன்றிய பாஜக அரசின் கை பொம்மைகளாக வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையில் இயங்கி வருகிறது என்று வாலிபர் சங்க மாநிலத் தலைவர் குற்றம் சாட்டினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டையில் ‘இந்தியாவை காக்க’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட தலைவர் ஆர். ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். கார்த்தி,“ஒன்றிய பாஜக அரசு தவறான வழிமுறைகளை பின்பற்றி எதிர்ப்புக் குரல்களை முடக்கி வருகிறது” என்றார். சில தினங்களுக்கு முன்பு மணல் கொள்ளை தொடர்பாக பாஜக தலைவர்கள் வழக்கில் சிக்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாவட்டச் செயலாளர் மா. கோவலன், பொருளாளர் கலைவாணன், லிக்காய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, சிஐடியு மாவட்டச் செயலாளர் அ. தவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.