சென்னை, நவ. 22 - தா.பி.சத்திரம் வாரிய குடியிருப்பில் மீண்டும் குப்பை தொட்டி வைக்கப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம், கவுன்சிலர் உறுதி அளித்தார். அண்ணாநகர் பகுதி, தா.பி.சத்திரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடிசை மாற்று) வாரிய குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி குப்பை தொட்டி வைத்து, கழிவுகளை சேகரித்து வந்தது. அண்மையில், அந்த குப்பை தொட்டியை அகற்றப்பட்டது. இதனால் மக்கள் குப்பை தொட்டி இருந்த இடத்தில் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து குப்பை தொட்டியை அதே இடத்தில் வைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று (நவ.21) கையெழுத்து இயக்கம் நடத்தினர். வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் சுகுமார், செந்தில், பகுதி பொருளாளர் ரங்க நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனையறிந்து கையெழுத்து இயக்கம் நடைபெறும் இடத்திற்கு வந்த 100வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தி பரமசிவம், கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, விரைந்து குப்பை தொட்டி வைப்பதாக உறுதி அளித்தார்.