கள்ளக்குறிச்சி அக்.10. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு செய்த மறு நிமிடமே தையல் இயந்திரம் வழங்கி உதவிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாருக்கு பயனாளி மனதார நன்றி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் அக்.9 அன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார். குறைத்தீர்ப்பு நாள் கூட்டத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சுகுமாரி என்பவர் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது வழி ஏற்படுத்தித் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் தையல் வேலை தெரியுமா என்று கேட்டறிந்து மாவட்ட சமூகநலத்துறை மூலமாக புதிய தையல் இயந்திரத்தினை பெற்று உடனே வழங்கினார். இக்கூட்டதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ். வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி. மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன். அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.