ஆற்காடு, ஏப். 15- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. 3 தளங்களை கொண்ட இந்த ஜவுளிக்கடையில் தரை தளத்தில் வீட்டு உபயோக பொருட்களும், முதல் மற்றும் 2ஆம் தளத்தில் ஜவுளி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு ஜவுளிக்கடையை பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். பின்னர் சுமார் 10 மணியளவில் அந்த ஜவுளிக்கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு வந்து பார்த்த போது கடைக்குள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து, கடையின் முன்புற ?ஷட்டர் மற்றும் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ மளமளவென தரை தளத்தில் இருந்து முதல் மற்றும் 2ஆம் தளங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் உள்ளே இருந்த ஜவுளி துணிகள் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டடு, சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்து ஆற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.