புதுச்சேரி, மே 28-
புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அறிமுகமானது. தற்போது 6 முதல் 9, 11ஆம் வகுப்புகளில் நடப்பாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. புதுச்சேரியில் 127 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமுலாவதால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது என்று கல்வித்துறை உறுதி அளித்திருந்தது.
அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது. இதில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பில் 6 பாடங்களைப் பயின்று வந்தனர்.
இதனால் நான்கு முக்கிய பாடப்பிரிவுகளுடன் ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் 11ஆம் வகுப்பில் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பத்தில் தமிழ் விருப்பப்படமாக இடம் பெற்றிருந்தாலும், மாணவர்கள் வேறு வழியில்லாமல் தமிழை தேர்வு செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுவை அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு 11ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். மொழிப் பிரிவில் தமிழுக்கு மட்டுமில்லாமல் ஏனாமில் தெலுங்குக்கும், மாகேவில் மலையாளத்துக்கும் இதே சூழல் ஏற்பட்டுள்ளதால் மொழிப் பாட ஆசிரியர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.