உளுந்தூர்பேட்டை,டிச 24- உளுந்தூர்பேட்டை அருகே தானம் கிராம பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட தானம் கிராமத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் தொடக்கப் பள்ளி மட்டும் இருக்கும் நிலையில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அதையூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றாக வேண்டும். ஆனால், இடையிலுள்ள இந்த 3 கிலோ மீட்டர் தூரமும் மாணவர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். இது வனப்பகுதி என்பதாலும், பேருந்து வசதி இல்லை என்பதாலும் அச்சத்தின் காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளை களை உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் படிக்க வைத்து நிறுத்திவிடும் நிலை உள்ளது. படிக்கும் பருவத்தில் 100 க்கும் மேற்பட்ட மாண வர்கள் இருந்தாலும் இந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தையும் நடந்து சென்று 6 ஆம் வகுப்பில் 6 மாணவர்கள், 7ஆம் வகுப்பில் 8 மாண வர்கள், 8ஆம் வகுப்பில் 10 மாணவர்கள், 9 ஆம் வகுப்பில் 11 மாணவர்கள், 10ஆம் வகுப்பில் 7 மாண வர்கள் மட்டுமே அதையூர் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இப்படி மொத்தம் 43 மாணவர்கள் மட்டுமே அதையூர் கிராமத்திற்கு நடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மீதமுள்ள கல்வி பயிலும் பருவ வயதுடைய மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல இயலவில்லை.மேலும் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் இடையில் நிறுத்திவிடும் சூழலால் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதனால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வி.சின்ராசு, நிர்வாகிகள் ஜெ. டார்வின், பி.சேகுவேரா ஆகியோர் தானம் கிராமத்திற்குச் சென்று பொதுமக்களையும், அதையூர் கிராம பள்ளிக்கு சென்று மாணவர்களையும் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் இதுகுறித்து எம்.கே.பழனி, பி.சின்ராசு ஆகியோர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியிலிருந்து அதையூர் கிராமம் வரை வந்து செல்லும் நகரப் பேருந்து தடம் எண் 2 ஐ மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உடனடியாக நீட்டித்து தானம் கிராமம் வரை சென்று மாண வர்களை ஏற்றி வர வசதி செய்ய வேண்டும்” என்றனர். கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் தமிழகத்தில் எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படாத நிலையை உருவாக்கிட தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார். இச்சூழலில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண வர்களின் கல்வி வாய்ப்பு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மறுக்கப்ப டுவது அநீதியானது என்றும் கூறினர். இந்த பிரச்சனை குறித்து கள்ளக்குறிச்சி போக்குவரத்து கழக கிளை மேலாளரை சந்தித்தும் கோரிக்கை மனு கொடுத்தனர்.