புதுச்சேரி, ஜூன் 5-
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்துவதை கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தாமல் 6ஆம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும். கலந்தாய்வு (சென்டாக்) மூலம் நடைபெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை குளறுபடி இன்றி விரைந்து நடத்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களை பெற வேண்டும். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயப் பிரகாஷ், வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கவுசிகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பிரவீன் குமார், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் நிர்வாகிகள் வந்தனா, அபிஜித், பாஸ்கர், சஞ்சய், அன்பு, சத்தியா, ஜஸ்டின், புவியரசன், பாலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.