ரஷ்யவிண்வெளி மையம் செல்லும் திருவள்ளூர் அரசுப்பள்ளி மாணவர்கள்
திருவள்ளூர்,ஏப்.17- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாண வர்களின் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் அறிவுத் திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ராக்கெட் அறிவியல் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலை மையில் நடந்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள 56 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 3 கட்ட பயிற்சிக்கு பின்னர் இறுதியாக 50 பேர் வருகிற ஜூன் மாதம் ரஷ்ய நாட்டிலுள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பாச்சூரில்லுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பி.இவாஞ்சிலின், புழலிலுள்ள பொப்பிலி ராஜா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பி மாணவி கீர்த்திகா, குமர வேல், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பிடிக்கும் ரூபேஷ், செங்குன்றம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் ரேஷ்மா, ஜீவிதா ஆகியோர் தேர்வாகினர். இந்நிலையில் ரஷ்யா செல்ல தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 6 பேரையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன், திருப்பாச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தாம்பரம் மாநகராட்சியில் தலைமைச் செயலர் ஆய்வு
தாம்பரம்,ஏப்.17- தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பெருங்களத் தூர், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழையாமல் மாற்றுப் பாதை வழியாக பெருங்களத்தூர், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி சாலை வழியாக செல்லும் வகையில் தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப் பட்டது. இந்த சாலை பீர்க்கன்கரணை பழைய காவல் நிலையம் அருகே துவங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங் குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் வழியாக வேளச்சேரி பிரதான சாலையை இந்த சாலை வந்தடையும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.48.7 கோடி மதிப்பில் இந்த சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பணி, கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கி நடை பெற்று வருகிறது. 4 கிலோ மீட்டர் தொலை வில் இந்த சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், ராஜகீழ்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு, மாடம்பாக்கம் புதூர் பகுதி யில் நரிக்குறவர்களுக்கு இடம் வழங்கு வது, நெடுங்குன்றம் மற்றும் பெருங்களத் தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது போன்றவற்றால் சாலை பணியை தொடர்வதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறை யன்பு, நெடுஞ்சாலை துறை செயலாளர் பிரதீப் யாதவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரி களுடன் சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் மப்பேடு பகுதியில் தாம்பரம் – ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை பணிகளை ஆய்வு செய்து அங்கு நடைபெறும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட றிந்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். பின்னர் ரூ.234.34 கோடி செலவில் பெருங்களத்தூர் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளில் தற்போது 69 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து உள்ளதை தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை, ராதா நகர் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை தலைமைச் செயலாளர் இறை யன்பு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணா நிதியுடன் ஆய்வு செய்தார்.
முட்செடிகளால் பூண்டி ஏரி கரைகள் பாதிப்பு
திருவள்ளூர்,ஏப்.17- சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியான பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதி சதுரங்கப்பேட்டை, புல்லரம் பாக்கம், கொழுந் தலூர், கைவண்டூர், பாண்டூர், பட்டரைபெரும் புதூர், அரும்பாக்கம் வரை 12.5 சதுர கி.மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ளது.பூண்டியில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 16 மதகுகள் உள்ளன. ஏரியை சுற்றிலும், 8 கி.மீ., தூரத்தில், 15 மீட்டர் அகலத்தில் கரை அமைக் கப்பட்டு தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூண்டி ஏரிக்கரையில் வளர்ந்துள்ள அதிக அளவிலான முட் செடி களால் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட தார் சாலை யில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே கரை நடுவில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. கரை யின் சுவர் இடிந்துள்ள இடம் வழியாக, அருகில் உள்ள கிராம மக்கள், கால் நடை களை கொண்டு வந்து, நீர்த்தேக்கத்திற்குள் மேய்ச்சலுக்காக விட்டுச் செல்கின்றனர். இதனால் கரைகள் மேலும் பாதிக்கப் பட்டு வருகிறது. எனவே பூண்டி ஏரியைச் சுற்றிலும் சேதமடைந்த கரையை சீர மைத்து, அங்குள்ள முட்செடி களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.60 லட்சம் வழிபறி
பெரம்பூர்,ஏப்.17- தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி சுப்பாராவ்-லட்சுமி. இவர்கள் வியாபாரத்திற்காக கடந்த வாரம் சென்னையிலுள்ள கடையில் நகை வாங்க ரூ.60 லட்சத்துடன் வந்தனர். ஆர்கே. நகரில் உள்ள ஒருவரது வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது மர்ம கும்பல் தம்பதியை வழிமறித்து ரூ.60 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணை யில் தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடேஷ், ரமேஷ் பத்தினி, இவரது சகோதரர் மதுபத்தினி மற்றும் புன்னாராவ் ஆகிய 4 பேர் இதில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் காவல்துறையி னர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
பூங்காவை காணவில்லை !
சென்னை,ஏப்.17- திருவொற்றியூரில் இயங்கிவரும் தொண்டர் இயக்கம் சார்பில் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வடி வேலு பாணியில் நூதனமான புகாரை முன்வைத்து மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பாட்டில் இருந்த கேசவன் பூங்காவை காணவில்லை. அந்த பூங்காவை மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தீயணைப்புத் துறை தீ தடுப்பு ஒத்திகை
பொன்னேரி,ஏப்.17- பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்க படுகிறது. இந்த நிலையில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் பேருந்து நிலையம், நகராட்சி பகுதி, குடிசை பகுதி, பள்ளி கல்லூரி, மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இருளர் காலனியில் குறைதீர் முகாம்
திருவள்ளுர்,ஏப்.17- பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது. இதில் இருளரின சாதி சான்றிதழ்கள், ரேசன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ், மண்டல துணை தாசில்தார் தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரிப்பு
சென்னை,ஏப்.17- சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு திருவள்ளூர், திருச்சி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகஅளவு வரத்தொடங்கியுள்ளன. தினமும் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 150 டன் அளவுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, காலப்படி, செந்தூரா, ஜவாரி ஆகிய 6 வகையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இமாம்பசந்த் ஒரு கிலோ ரூ.120-க்கும், பங்கனப்பள்ளி ரூ.50-க்கும், ஜவாரி ரூ.80 முதல் ரூ.100-க்கும், மல்கோவா ரூ.100 முதல் ரூ.120-க்கும், செந்தூரா ஒரு கிலோ ரூ.40 முதல் - ரூ.60 வரையிலும் விற்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது மாம்பழம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. மேலும் இனி வரும் நாட்களில் மாம்பழம் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவில் விஷம் கலந்து தாத்தா- பாட்டி கொலை
விழுப்புரம்,ஏப்.17- விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமம் திரவுபதியம்மன் நடுத் தெருவை சேர்ந்தவர் கழுவு (65). முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி மணி (60). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதில் இளைய மகன் முருகன் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் சக்தி (20) அடிக்கடி பில்லூர் சென்று தனது தாத்தா-பாட்டியை பார்த்து வருவது வழக்கம். அதே போல், தனது தாத்தா-பாட்டியை பார்க்க வந்துள்ளார். இந்த நிலையில், வெகுநேரமாக கழுவு வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கழுவு அவரது மனைவி மணி ஆகியோர் பிணமாக கிடந்ததை கண்டனர். பிறகு, இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிணமாக கிடந்த கணவன்-மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போது கழுவு பேரன் அருள் சக்தி வந்து சென்றதாக தெரிவித்தனர். அவரது செல்போனில் காவல் துறையினர் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. தொடர்ந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், உணவில் விசம் கலந்து கொடுத்து கொன்றது தெரிய வந்தது.
ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
திருவண்ணாமலை,ஏப்.17- திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 6 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கானையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முதியவர் மயங்கி விழுந்து சாவு
வேலூர், ஏப்.17- வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் மேஷக் (62). இவர் பெரு முகையிலுள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மேஷக் திங்களன்று (ஏப்.17) காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.