திருவண்ணாமலை, ஜன. 6- திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வேளாண்மைப் பயிர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன், பி. கணபதி, உதயகுமார், பாலசுந்தரம், வழக்கறிஞர் அபிராமன் ஆகியோர் உரையாற்றினர். கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், கிழங்கு வகைகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம், கரும்பு, வாழை பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கும், இடிந்த கிணறு மற்றும் பம்ப்செட்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.