districts

மெட்ரோ ரயிலில் அதிகளவில் பயணித்தவர்களுக்கு சிறப்பு பரிசு

சென்னை,ஏப்.25-  மெட்ரோ ரயிலில் அதிகளவில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமுறை பயணம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, கடந்த மார்ச் 21ம் தேதி முதல் இந்த மாதம் 20ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் முன்னிலையில் நடந்தது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை வழங்கப்பட உள்ளது. இதேபோல், மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்ச தொகையான ரூ.500க்கு டாப்அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப்அப் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பனும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அடுத்த மாதமும் தொடர உள்ளது. அடுத்த மாதத்திற்கான குலுக்கல் மே 21ம் தேதி நடைபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

;