districts

சென்னை முக்கிய செய்திகள்

தையல் தொழிலாளர் நல வாரியத்திற்கு தனி நிதியம்  பேரவைகூட்டத்தில் வலியுறுத்தல்

அம்பத்தூர், அக். 13- பெருநகர தையல் தொழிலாளர் சங்கத்தின் 2ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதி பேரவை விபிசி நினைவகத்தில் தலைவர் டி.கே.சம்பத்ராவ் தலைமையில் நடைபெற்றது.  எஸ்.மைதிலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எஸ்.எம். கவுரி வரவேற்றார். வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.குணசேகரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார்.  பகுதிச் செயலாளர் எஸ்.வேலு வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.மைதிலி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு நிர்வாகிகள் ஆர்.மணிமேகலை, ஆர்.கோபி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர் பேரவையை நிறைவு  செய்து பேசினார். தீர்மானங்கள் தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனி நிதி யம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் தையல் நலவாரிய  பணப்பயன்களை அதிகரிக்க வேண்டும், வேலை வாய்ப்பு கள் குறைந்து வரும் நிலையில் தையல் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக டி.கே.சம்பத்ராவ், செயலாளராக எஸ்.எம்.கவுரி, பொருளாளராக எஸ்.மைதிலி உள்ளிட்ட 9 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

பிறமாநில ஊழியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு

சென்னை, அக்.13- பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் தமிழ் அல்லாத  ஊழியர்களுக்கு பேச்சுத் தமிழ் வகுப்புகள்  தமிழ்நாடு அரசின்  தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் முதல் குழுவிற்கான  வகுப்புகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டேட் வங்கியின் கல்வி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் ஆர். கோமகன், உதவி இயக்குனர் மதுரா ராஜகோபால் மற்றும் எஸ்பிஐ-யின் வட்டார துணை பொது மேலாளர் சஞ்சீவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலக்குழி மரணங்களை ஒழிக்கக்கோரி திருவான்மியூரில் நாளை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை,அக்.13- டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த நாளில் அவர் பாராட்டிய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவமான டிஆர்டிஓ  பயோ செப்டிக் டேங்க் தொழில் நுட்பத்தை தமிழ்நாடு அரசும்  ஒன்றிய அரசும் அமல்படுத்தி மலக்குழி மர்ணங்களை ஒழிக்கக் கோரி   சமூகநீதி அறிவியல் விழிப்புணர்வு சந்திப்பு  நிகழ்ச்சி   திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற் கரையில் ஞாயிறன்று (அக்,15)  மாலை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில்   பொன்ராஜ் ( கலா மின் அறிவியல் ஆலோசகர் ), கல்வியாளர். பிரின்ஸ் கஜேந்திரபாபு, திரைக் கலைஞர். ரோகிணி, விஞ்ஞானி பத்மஜோதி முனைவர்.அய்யப்பன் (சிஎஸ்ஐஆர்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி,அக்.13-  பழைய பெங்களூரு சாலையில் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.   கிருஷ்ணகிரியில் நகரின் பிரதான பழைய பெங்களூரு சாலையில் உள்ளது பிரபல ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக்கடை. அதன் உரிமையாளர் எம்.பி.சுரேஷ். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.  இந்த நிலையில், காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை (அக்.13) தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.