districts

7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி மோசடி

விழுப்புரம், மார்ச் 21- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகே தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தை திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் (51) மற்றும் அவ ருக்கு தெரிந்த 8 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித் தரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தனியார் நிர்வாக இயக்குநர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார், அன்பு ஆகிய 9 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் 7 ஆயிரம் பேரிடம் இருந்து மொத்தம் ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் திண்டிவனத்தில் பதுங்கி இருந்த மதிவாணன் என்பவரை காவல் துறையினர் திங்களன்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.