சிதம்பரம், மார் 7- சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. ஆண்டு தோறும் கடல் ஆமைகள் (ஆலிவ் ரிட்லி வகை) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் கடற்கரை பகுதியில் முட்டையிட்டுச் செல்வது வழக்கம். அவற்றை வனத்துறை சார்பில் சேகரித்து செயற்கை பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடுவது வழக்கம். இந்தாண்டு மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர் செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி பிச்சாவரம் மாங்குரேவ் காடுகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது. சேகரித்த முட்டைகளை செயற்கை பொரிப்பகம் அமைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20,974 முட்டைகள் சேகரித்து வைக்கப்படன. இந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளி வந்ததையடுத்து வனசரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் கிள்ளை எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குமரவேல், ஆசிரியர் ராஜசெல்லம் ஆகியோர் முன்னிலையில் வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர் ராஜேஷ், படகு ஓட்டுநர் முத்துக்குமாரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக 1,342 ஆமைக் குக்சுகளை கடலில் விட்டனர். இந்த ஆலிவ் ரிட்லி ஆமை கடலில் மீன்வளத்தை அழிக்கும் ஜல்லி வகை மீன்களை அழிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.