districts

img

சாக்லேட் நிறுவனத்தின் அடாவடியை அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 3-  

    லோட்டி சாக்கோ பை நிறுவனத்தின் சட்ட விரோத பணி நீக்கத்தை முடிவிற்கு கொண்டு வர, தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து சங்கங்கள் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் -3), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் உள்ள நேமம் என்ற பகுதியில் தென்கொரியா நாட்டை சேர்ந்த லோட்டி சாக்கோபை என்ற பன்னாட்டு சாக்லெட்  தொழிற்சாலை நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இதில் லோட்டே சாக்கோபை என்ற பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 60 கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தொழிற்சங்கம் அமைத்தனர். சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக சங்க நிர்வாகிகள் 4 பேரை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததுள்ளது. மேலும் 11 தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் பூந்தமல்லி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 47 நாட்களாக தொடரும் வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு இதில் தலையிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்டுமான சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், உள்ளாட்சி ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் சனிக்கிழமையன்று  தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   சிஐடியு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜெனிடன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, தமுஎகச மாவட்டச் செயலாளர் பாரி, ஆட்டோ சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் எம்.சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.