districts

img

தோராய பட்டாவை, ஒரிஜினல் பட்டாவாக மாற்றக்கோரிக்கை

திருவள்ளூர், செப்.28- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட  வேட்டைக்காரன் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்களுக்கு பிறகு 2008 ஆம் ஆண்டு 49 குடும்பங்களுக்கு தோராய பட்டாவை வருவாய்த்துறையினர் வழங்கினர். இந்த தோராய பட்டாவை வழங்கி 15 ஆண்டுகள் கடந்த பிறகும், பட்டாவை கிராம பதிவேட்டில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் பட்டா வழங்கியும் பயனில்லாமல் உள்ளது. மேலும் விடுபட்ட 17 குடும்பங்களுக்கு இன்னும் பட்டாக்களை  வழங்கவில்லை. இந்த நிலையில் தோராய பட்டாவை ஒரிஜினல் பட்டாவாக மாற்றி கிராம பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பெல்ட் ஏரியா என அதிகாரிகள் தட்டிக் கழிப்பது   ஏற்றுக்கொள்ள முடியாது.  இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு அனைவருக்கும் பட்டா வழங்கி,  அரசின் அறிவிப்புகள், சலுகைகள் அம்மக்களுக்கு சென்று சேர  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் புதனன்று (செப்-27),  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில துணைத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் ஜி.ராஜா ஆகியோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.