districts

நீச்சல் தெரியாததால் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கிய மாணவர் பலி

செம்பரம்பாக்கம், செப்.4-  குன்றத்தூர், நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன் (வயது17). கோவூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சனிக்கிழமை மாலை அவர் தனது நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை அவரது நண்பர்கள் நீச்சல் அடித்து குளிக்கும்படி ஆழமான பகுதிக்கு அழைத்தனர். அப்போது ஜெகதீசன் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குன்றத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்து ஏரியில் மூழ்கிய ஜெகதீசனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீச்சல் தெரியாமல் ஜெகதீசனை ஏரியில் மூழ்கும் காட்சியை விபரீதம் அறியாமல் கரையில் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

;