districts

சக மனிதனின் பசியை உணரும் பண்புப் பயிற்சியே ரமலான் நோன்பு

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஆகச் சிறந்த வழிகாட்டுதல்களையும், விழுமங்களுக்கான பயிற்சியையும் வழங்குகிறது. தினந்தோறும் ஐவேளைத் தொழுகையின் மூலம் மட்டுமின்றி வாழ்வின் ஒவ்வொன்றுக்கும் தெள்ளிய வழிகாட்டுதல்களை நெறிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தப் பயிற்சியின் மகத்தான பகுதிதான் ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் ஒரு மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருப்பது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று. இந்த நோன்பின் அடிப்படை இறையச்சம்.  பசித்திருத்தலின் மூலம் சக மனிதனின் பசியை உணரும் பண்புப் பயிற்சி, ஏழைகளுக்கு வாரி வழங்கும் பயிற்சி, புறம் பேசுதல், பொய்யுரைத்தல், ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பயிற்சி, இச்சையை அடக்கும் பயிற்சி,  இறைவனுக்கு நன்றி செலுத்தும் பயிற்சி, இறைவேதம் திருக்குர்ஆனுடன் ஆழமான தொடர்பு ஏற்படுத்தல், இரவு நேரம் நின்று வணங்குதல், தன் பாவங்களை நினைத்து வருந்தி அதிலிருந்து மீளுதல், இறைவனிடமிருந்து கிடைக்கும் வெகுமதி மீதான நம்பிக்கை போன்ற எண்ணற்ற பயிற்சிகளை இந்த ரமலான் நோன்பு வழங்குகிறது. இந்தப் பண்டிகை மகிழ்வின் கொண்டாட்டங்களுடன் முடிந்து விடாமல் ஏழைகளுக்கு உதவும் திருநாளாகவும் திகழ்வதால் இது ஈகைப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. மனித நேயமும், இறை நம்பிக்கையும் ஊற்றாய்ப் பெருகும் இந்த ஈகைத் திருநாளின் மகிழ்வும் அன்பும் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கட்டும். அனைவருக்கும் எமது நோன்புப் பெருநாளின் நல் வாழ்த்துகள்.

 மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ மாநிலத் தலைவர்

ஜமாஅத்தே இஸ்லாமி `ஹிந்த்

தமிழ்நாடு, புதுச்சேரி