districts

img

அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கவேண்டும்

அம்பத்தூர், ஜூலை 23- அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தியிடம் அளித்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சி 7ஆவது மண்டலம் அம்பத்தூர் 85ஆவது வார்டுக்குட்பட்ட மங்களபுரம் பகுதி 100 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பூர்விக கிராமமாகும். இங்கு சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அம்பத்தூர் நகராட்சியாக இருந்த போது இந்த பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கால்வாய்கள் சேத மடைந்து ஆங்காங்கே மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. அம்பத்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இது வரை மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கால்வாய்கள் உள்ளன. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்களபுரம் சுடு காட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்களாகியும் இதுவரை புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பல்வேறு விதமான சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அந்த மக்கள் பூர்வீகமாக பயன்படுத்தி வந்த கருமாங்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முட்புதர்கள் நிறைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், பகுதிச் செயலாளர் இரா.கோபி, நிர்வாகிகள் கே.சீனிவாசன், எம்.பகத்சிங், ஜி.மூர்த்தி, பி.வீரன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.