கடலூர்,அக்.14- கடலூர் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் தொடர் போராட்டம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் முயற்சியின் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.56 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடலூருக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் துறைமுகம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளை ரயில்வே முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது, கூடுதல் கோட்ட பொறியாளர் ஜான்சன், கூடுதல் கோட்ட பொறியாளர் நாராயணன் ஆகியோருடன் மேற்கொண்டனர். அப்போது, ரயில் பயணிகளின் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் ரயில்வே அமைச்சகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து தில்லியில் பேசி நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். விழுப்புரம், தாம்பரம் பயணிகள் ரயில், மயிலாடுதுறை கோவை விரைவு ரயில், மயிலாடுதுறை திருச்சி பயணிகள் ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் கழிவறை வசதிகள், குடிநீர், மேற்கூரை வசதிகள், மின்விசிறி, பயணிகள் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து ஏற்கனவே ரயில்வே துறை அமைச்சரிடம் ஆர்.சச்சிதானந்தன் எம்.பி மனு அளித்து இருந்தார். இந்த பிரச்சினைகளை தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம்உறுதியளித்தார். இந்த ஆய்வு பணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம், எம்.ஜெய பாண்டியன், பாஸ்கரன், நெல்லிக்கும்பகுதி செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், குடியிருப்போர் சங்க பொருளாளர் ரமணி, துணை பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவநாதன், கடலூர் மாநகர பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, இணை ஒருங்கிணைப்பாளர் குரு ராமலிங்கம், மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, மற்றும் ரவிச்சந்திரன், வள்ளலார் தொண்டு மையத்தின் தலைவர் ராஜதுரை ஆகியோர் உடனிருந்தனர்.