சென்னை, ஜூலை 29 - போரூரில் 4 கடைகளுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போரூரில் ராமநாத ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 60 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அறநிலை யத் துறைக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் குன்றத்தூர் சாலையில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க வந்தனர். இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “பயனாளிகள் உயிரோடு இல்லாத நிலையில், அவர்களின் வாரிசுகளுக்கு 3 தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து சீல் வைப்பதை ஏற்க முடியாது. அறநிலை யத்துறை ஆணையர் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பயனாளி கள் வாடகை உயர்வுக்கு ஒப்புக்கொள்ளா விட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, பயனாளிகள் ஜூன் மாதம் வரை வாடகை பாக்கியின்றி செலுத்தி உள்ள நிலையில் சீல் வைப்பது ஏன்?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாத அதிகாரி கள் 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை காட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு வாக்குவாதமும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டோரை காவல்துறையி னர் கைது செய்தனர். இதுகுறித்து வ.செல்வம் கூறுகையில், “அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை மாறாக, இணை ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படுகின்றனர். வாடகை நிர்ணயக்குழு ஜூலை இறுதிக்குள் வாடகை நிர்ணயம் செய்ய உள்ள நிலையில், அதிகாரிகளின் செயல்பாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.