ஆரத்திச் சிவப்புக்கு
ஆசைப் படுகிறாய்
வெற்றிலைச்
சிவப்பில்
விருப்பம் கொள்கிறாய்
மருதாணிச் சிவப்பில்
மகிழ்ந்து போகிறாய்
கொள்கையில் சிவப்பு மட்டும்
கூடாதா உனக்கு?
புரிந்து கொள்
தேகம் அடிப்பட்டாலும்
தேசம் அடிப்பட்டாலும்
முதலில் வெளிப்படுவது
சிவப்பு தான்.
அழுக்கை எரிக்கும்
நெருப்பு
அநீதிக்கு எதிராய்
உருட்டும் கண்கள்
உண்மையை பேசும்
நாக்கு
எல்லாமே சிவப்பு
என்பது தான்
சிறப்பு.
வெற்றியில் துடிக்கும்
நெற்றியில்
குங்குமம் இருந்தால்
கொள்ளை அழகு.
மதங்களை கடந்தும்
மனிதம் பேசும்
சிவந்த உதடுகள்
வர்ண பேதம் பார்ப்பதில்லை
சிவப்பு வண்ணம்.
அக்கப்போர் பேசி
அலைகிற மனிதனே
வர்க்கப் போர் பக்கம் வா.
வண்ணச் சிவப்பை
மட்டையால் தீற்றினால்
வீடு பொலிவு பெறும்
தத்துவச் சிவப்பை
மண்டையில்
ஏற்றினால்
நாடு பொலிவு பெறும்.
கடைசியாய் ஒன்று
செம்மண் பாதையில்
நடக்க
யாருக்குத்தான் பிடிக்காது
- ஜீவி