திருவள்ளூர், ஜன. 6- சாவித்திரிபாய் புலே பிறந்த நாளை பெண் கல்வி நாளாக அறிவிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சாவித்திரிபாய் புலே பிறந்த நாளான ஜன 3 அன்று பெண் கல்வி நாளாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலாளர் மீரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கழகத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் சி.வேணி வரவேற்றார். மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் ரா.மகாலட்சுமி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட மாவட்டத்தலைவர் து.சதீஷ் சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உ. தென்னவி வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் சாவித்திரிபாய் புலே படம் திறக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொன்னேரி கல்வி மாவட்ட இணைச்செயலாளர் மீனாகுமாரி உறுதிமொழி ஏற்க செய்தார். இதில் கீழ்மணமேடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளியல் ஆசிரியர் விஜயா, திருமழிசை சுந்தரம் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் மங்காலட்சுமி சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் கருத்துரையாற்றினர். இதனை தொடர்ந்து பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும்,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் சி.லலிதா சிறப்புரையாற்றினார். பொன்னேரி கல்வி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமுதா நன்றி கூறினார்.