districts

img

பள்ளிக்கரணையில் ஏரிக்குள் பாய்ந்த கார்: காவலாளி பலி

சென்னை, ஜூலை 10- சிறுசேரியில் பிரபல தனியார் ஐ.டி.நிறு வனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுசல் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இரவு நேரத்தில் பணிமுடிந்து செல்லும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ள கார்களில் வீட்டுக்கு பயணம் செய்யும் போது காவலாளி கவுசல் உடன் செல்வது வழக்கம். செவ்வாயன்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஊழியர்கள் சிலர் பணி முடிந்து ஒப்பந்த அடிப்படையில் உள்ள காரில் பல்லாவரம் நோக்கி பயணம் செய்தனர். அவர்களுடன் காவலாளி கவுசலும் சென்றார். காரை ஓட்டுநர் ராஜ சேகர் ஓட்டினார். ஊழியர்களை இறக்கி விட்டு பள்ளிக்கரணை அருகே பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை யில் கார் சென்று கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தகார் சாலை யோரம் இருந்த நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்தது. இதில் காருக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் ஓட்டுநர் ராஜசேகரும், காவலாளி கவுசலும் சிக்கிக்கொண்டனர். காருக்குள் தண்ணீர் புகுந்ததால் காவலாளி கவுசல் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவ்வழியே சென்ற ஜே.சி.பி. வாகனத்தை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த காரை மீட்டனர். அப்போது காருக்குள் காவலாளி கவுசல் பிணமாக கிடந்தார். ஓட்டுநர் ராஜ சேகர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையோரம் ஏரிக்கரையில் எந்த தடுப்புகளும் இல்லை. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஏரிக்குள் பாய்ந்துள்ளது. மேலும் காரில் பயணம் செய்த ஐ.டி.நிறுவன ஊழி யர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்த போது விபத்து ஏற்பட்டதால் அதில் பயணம் செய்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். விபத்து பற்றி அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் ஓட்டுநரும் உயிர் தப்பினார்.